n s கிருஷ்ணன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமது 49வது வயதில் 30.8.1957 அன்று மரணம் அடைந்தார். அவருடைய கடைசி படமான "அம்பிகாபதி" (சிவாஜி, பானுமதி நடித்தது) அவர் மறைவுக்குப்பின் வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், அவர் மறையும் வரை படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர். ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித்த "அம்பிகாபதி" படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.
அப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகஸ்டு 30ந்தேதி காலை 11.10 மணிக்கு, தமது 49வது வயதில் காலமானார். செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரை உலக நட்சத்திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர். வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கதறினார்.
மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது. "சிதை"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார். நாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.
எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, "அம்பிகாபதி" வெளிவந்தது. படத்தில், அவர் இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.
தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். வருமானத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை வெறும் கையுடன் அனுப்பமாட்டார்.
பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார். கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார். பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார். என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள்.
முதல் மனைவி நாகம்மாளுக்கு ராஜா, கோலப்பன் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இறந்துவிட்டனர். டி.ஏ.மதுரம் இரண்டாவது மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, 6 மாதத்தில் இறந்துவிட்டது. டி.ஏ.மதுரத்தின் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாள், என்.எஸ். கிருஷ்ணனின் மூன்றாவது மனைவி. இவர் காலமாகிவிட்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு 4 மகன்கள்; 3 மகள்கள். இவர்களுடைய திருமணங்களை எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்தி வைத்தார். என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.வேம்பு அம்மாள் தம்பதிகளின் மகன்களும், மகள்களும் உயர் படிப்பு படித்தவர்கள். பேரன், பேத்திகளில் பலர் வெளிநாடுகளில் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment